Wednesday, June 29, 2016

பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் !!!


1. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்

2. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.

3. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்

4. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.

5. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால்
பொடுகுக்கு ரெம்ப நல்லது

6. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.

7. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்

8. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்
9. வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்

10. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.

11. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.

12. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.

13. தேங்காய் எண்ணையுடன் வேப்பை என்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.

14. நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.

15. நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாலையை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.

16. தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.

17. பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

18. அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்
**

மேலும் சில குறிப்புகள் :

*மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

*வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.

*தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல் லது சீயக்காய் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

*வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.

* எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

*தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில், வினிகர் கலந்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர பொடுகு நீங்கும்.

*வாரம் ஒரு முறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

*தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.

*தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.

*முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.

*துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

* 4ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 4 ஸ்பூன் நல்ல தரமான சியக்காய் பவுடர், 2 கப் மருதாணி பவுடர், 1 எலுமிச்சை பழ தோல், 1 ஆரஞ்ப்பழத்தோல், 2ஸ்பூன் வேப்பிலை பொடி அனைத்தையும் ஒன்றாக கலந்து 1கப் தயிருடன் கலந்து தலைக்கு வாரம் ஒரு முறை தேய்த்துக் குளித்தால் பொடுகு போய்விடும்.

கூந்தல் மிருதுவாக இருக்க-

*வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

*நெல்லிக்காயை பாலில் வேகவைத்து, கொட்டை நீக்கிவிட்டு மசித்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்தால், கூந்தல் மிருதுவாக இருக்கும்.

*டீ டிகாஷனில் சிறிதளவு எலுமிச்சம்பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்தால், கூந்தல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

Wednesday, June 15, 2016

மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்கு பயன்படும்..?

*பாதுகாக்க படவேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*

*அருகம்புல் பொடி* அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி* பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி* அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி* நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி* நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பொடி* குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி* வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி* தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி* உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி* அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பொடி* அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி,* மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி* மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

*கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி* சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி* கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி*
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர்* குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி*
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி* பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி* சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி* சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி* இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி* சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி*
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி*
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

Monday, June 13, 2016

மோர் இன்றி அமையாது உலகு

கிராமத்து மண்வாசனை கமழ, பாரம்பரியக் கறவை மாடுகளின் பாலிலிருந்து அறிவியல் நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட மோரின் சுவையையும் மருத்துவக் குணங்களையும் சிலாகித்து வாழ்த்திய மரபு நம்முடையது. இயற்கையின் கொடையான மோருக்கு ஈடுகொடுக்க வணிகப் பானங்களால் முடியாது. பசுவின் உயிர்ச் சத்துகளுள் ஒன்றான மோர், வேனிற் காலத்தில் உண்டாகும் வெப்பத்தைக் குறைப்பதோடு பல ஆரோக்கியப் பலன்களையும் தருகிறது.
குறுந்தொகையில்...
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்….தீம்புளிப்பாகர்…” என்ற குறுந்தொகை பாடல் புளித்த தயிரைக் கொண்டு, புளி சேர்க்காத இனிமையான தீம்புளிப்பாகர் (மோர்க் குழம்பு) செய்து தலைவனுக்குத் தலைவி கொடுத்து மகிழ்வித்ததாகக் குறிப்பிடுகிறது. மோரானது பானமாக மட்டுமன்றி, பண்டைய காலம் முதல் சமையலிலும் முக்கிய இடம்பெற்று உடலைச் சீராக்கியுள்ளது. நமது வாழ்வோடு பயணித்த மோரின் சிறப்புகளைப் பார்ப்போம்:
செரிமானப் பாதை சீராக
உணவருந்தும்போது இறுதியில் மோர் சாதம் சாப்பிட வேண்டும் என்று முன்னோர் வலியுறுத்தியதற்குக் காரணங்கள் பல. செரிமானப் பாதையில் உள்ள சிறு சிராய்ப்புகளையும் புண்களையும் ஆற்றும் தன்மை மோருக்கு உண்டு. உடலுக்கு நலம் தரக்கூடிய `புரோ-பயாடிக்’ நுண்ணுயிரிகளைத் தன்னகத்தே கொண்டு, வேனிற் காலத்தில் ஏற்படக்கூடிய வயிறு - குடல் சார்ந்த உபாதைகளை மோர் சீராக்குகிறது. செரிமானத்துக்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. பெருங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி சேர்ந்த தாளித்த மோர், பல குடும்பங்களில் இன்றும் இடம்பெறும் அற்புதச் செரிமானப் பானம்.
மருந்தாகும் மோர்
கலோரிகள் நிறைந்த செயற்கை பானங்களுக்கு நடுவில், கலோரிகள் குறைந்த மோரானது உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. கரிசாலை, கீழாநெல்லியை மோரில் கலந்து அருந்துவது காமாலை நோய்க்கான இயற்கை மருந்து. மாதவிடாய்க் காலங்களில் பனை வெல்லம் கலந்த மோரைப் பெண்கள் அருந்திவருவதால், மாதவிடாய்த் தொந்தரவுகள் குறையும். கால்சியம், பாஸ்பரஸ், ரிபோஃபுளோவின் போன்ற சத்துகள் மோரில் அதிக அளவில் இருப்பதால் எலும்பு, தசைகளின் வலிமைக்கும், நரம்புகளின் செயல்பாட்டுக்கும் உதவுகிறது. அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுபவர்களுக்கு மோர் சிறந்தது. தோல் நோய் உள்ளவர்கள் அதிக அளவில் நீர்மோர் அருந்துவதால், நோய் விரைவில் குணமடையும். வாய்ப் புண், வயிற்றுப் புண் உள்ளவர்கள், மணத்தக்காளி பழம் கலந்த மோரைக் குடித்துவரப் புண்கள் விரைவில் ஆறும்.
திரிதோஷ சமனி
“மோருண வளிமுதன் மூன்றையுமடக்கி” எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடல், மோரானது வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்தும் என்று குறிப்பிடுகிறது. உடலில் உண்டாகும் வீக்கம், ரத்தக் குறைவு, பேதி, பசியின்மை, தாகம், உடல் வெப்பம் போன்றவற்றுக்குப் பசுவின் மோர் சிறந்தது. கறிவேப்பிலைப் பொடியை மோரில் கலந்து பருக, பசி அதிகரிப்பதோடு ரத்தச் சிவப்பணுக் களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
நீர் சுருக்கி, மோர் பெருக்கி
கிருமிகளை அழிக்க, நீரை நன்றாகக் காய்ச்சிச் சுண்ட வைத்தும், மோரின் குணங்களை முழுமையாகப் பெற, மோருடன் அதிக நீர் சேர்த்து, நீர் மோராகவும் அருந்த வேண்டும் எனும் அறிவியலை `நீர்சுருக்கி மோர்பெருக்கி’ என்று அன்றே ஓலையில் செதுக்கினார் தேரையர். மோரின் புளிப்புத் தன்மை நீங்கும் அளவுக்கு நீர் சேர்த்துப் பருகுவதால், புளிப்பு சுவை அதிகரிப்பதால் உண்டாகும் பாதிப்புகள் ஏற்படாது என்பதே சித்தர்களின் சிந்தனை.
அனுபானம்
மோரின் சிறப்பை அறிந்தே, பல சித்த மருந்துகளைத் தயாரிக்க மோர் பயன்படுத்தப்படுகிறது. சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் சில மருந்துகளின் அனுபானமாகவும் (Vehicle) மோர் பயன்படுகிறது. உடலுக்கு எவ்விதமான தீங்கையும் உண்டாக்காத காரணத்தால் மோரானது பத்தியத்தின்போதுகூடப் பயன்படுத்தக் கூடிய உணவு வகைகளுள் ஒன்று. மூலம் மற்றும் கருப்பை நோய்களுக்கு, கற்றாழைக் கூழை மோரோடு கலந்து குடிப்பது மிகச் சிறந்தது.
வெயில் காலங்களில்
வேனிற் காலம் எனும் ரதத்தை அழகாக இழுத்துச் செல்லும் சாரதி மோர். வெயில் காலத்தில் உண்டாகும் சிறுநீர் எரிச்சல், நீர் சுருக்கு போன்ற உபாதைகள் வராமல் தடுக்க மோர் குடிப்பது அவசியம். மோர் அருந்துவதால் குடற்புண், கண்ணெரிச்சல், கைகால் எரிச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். குளிர்ச்சிக்காக ஐஸ் கட்டிகளை மோரில் கலந்து குடிப்பதைத் தவிர்த்து, மண் பானைகளில் குளிரூட்டப்பட்ட மோரைப் பயன்படுத்தலாம். மோரின் குளுமையோடு பானையின் குளுமையும் சேர்வதால் வெப்பத்தைக் குறைக்கும் அற்புதமான பானமாகும். அலுவலகத்துக்குச் செல்வோர், பள்ளிக் குழந்தைகள், நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வோர், புட்டிகளில் நீருக்குப் பதிலாக நீர்மோரையே தாகம் தணிக்க எடுத்துச் செல்லலாம். மாலை வேளைகளில் டீ, காபிக்குப் பதிலாகச் சீரக மோரைப் பருகலாம். வெயில் காலங்களில் உண்டாகும் நீரிழப்பை ஈடுசெய்வதில் மோருக்கு முக்கியப் பங்குண்டு. தாகத்தை நிவர்த்தி செய்து, சிறுநீர் பெருக்கியாக மோர் செயல்படுகிறது.
நஞ்சகற்றி
மது, புகையிலையால் உடலில் சேர்ந்திருக்கும் நஞ்சை வெளியேற்ற, தினமும் புதினா கலந்த மோர் குடிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். உடலில் சேர்ந்த கழிவைச் சிறுநீரின் மூலம் வெளியேற்றும் குணம் மோருக்கு உண்டு. சில வகை உணவுப் பொருட் களுக்கு, மோரானது நஞ்சு முறிவுப் பொருளாகவும் பயன்படுகிறது.
மோருடன் வரவேற்போம்
ஆங்காங்கே `மோர்ப் பந்தல்கள்’ அமைத்து மக்களின் நலம் காத்த வரலாற்று குறிப்புகள் நம்மிடம் ஏராளம் உண்டு. பல ஆயிரம் வருடங்களாக வெயில் காலத்தை எதிர்கொள்ள ஏற்படுத்தப்பட்ட விருந்தோம்பல் முறை மோர்ப் பந்தல்கள். ஆனால் இன்றைக்கு மோர்ப் பந்தல்கள் குறைந்து, செயற்கை குளிர்பானங்களின் விற்பனை அதிகமாகிவிட்டது. இனிமேலும் விழித்துக்கொள்ளாவிட்டால், நம் ஆரோக்கியமும் பாரம்பரியமும் முற்றிலும் தொலைந்து போகலாம்.
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

மறந்துபோன கோடை பானங்கள்

வாயுக்கள் நிரப்பப்பட்டு, `சுவையூட்டிகள்’ சேர்க்கப்பட்டு, கெடாமல் இருக்க ரசாயனக் கலவைகள் கலக்கப்பட்டு, பழங்களின் சத்து என்று பொய் முலாம் பூசப்பட்டு, பல் கூச்சம் உண்டாகும் அளவுக்கு `சில்’லெனக் கிடைக்கும் செயற்கைக் குளிர்பானங்களைத் தொடர்ந்து அருந்துவதால் எலும்பு அடர்த்தி குறைவு நோய், வயிற்றுப் புண், செரியாமை, உடல் பருமன், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்றவை நம் மீது எதிர்பாராத தாக்குதல் நடத்த அதிக வாய்ப்புள்ளது என்கின்றன ஆராய்ச்சிகள்.
கடந்த இருபது ஆண்டுகளாகப் பன்னாட்டு செயற்கை பானங்களிடம் அடிமைப்பட்டு நோய்களால் அவதிப்படுகிறோம். கழிப்பறையைச் சுத்தம் செய்யும் அமிலத்தைப் போலப் பயன்படும் ஒரு செயற்கை பானம், நம் உடலில் எப்படிப்பட்ட வன்முறையை அரங்கேற்றும் என்பதை யோசித்துப் பார்த்திருக்கிறோமா? இந்தக் கோடையிலிருந்தாவது இயற்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாரம்பரிய பானங்களைப் பருக ஆரம்பிப்போம். கோடைக் காலத்தில் உண்டாகும் நீரிழப்பை ஈடுசெய்யவும், இழந்த ஆற்றலை மீட்கவும், தாகத்தைத் தணித்துக்கொள்ளவும், வெப்ப நோய்கள் தாக்காமல் பாதுகாத்துக்கொள்ளவும் பயன்படும் பாரம்பரிய பானங்கள் என்னென்ன?
`மருத்துவச் சக்கரவர்த்தி’ கம்பு
முப்பது வருடங்களுக்கு முன்புவரை, இல்லம்தோறும் தேவையான அளவுக்குக் கம்பரிசி இருந்தது. வெயில் காலம் வரும்போது, கம்பஞ்சோற்றோடு மோரும் சின்ன வெங்காயமும் கலந்த குளிர்ச்சியான பானம் தயாரிக்கப்பட்டு அருந்தப்பட்டது. ஆனால் இன்றைக்குக் கம்பு, கேழ்வரகு என்றாலே முகத்தைச் சுளிக்கும் இளவட்டங்கள் பட்டிதொட்டிகளில்கூட பெருகிவிட்டனர். பாரம்பரியச் சிறுதானியமான கம்பில் மருத்துவக் குணங்கள் அதிகம் என்பது அவர்களுக்குத் தெரியாது.
‘கம்பு குளிர்ச்சியெனக் காசினியிற் சொல்லுவர்காண்’ என்று எழுதி, கம்பங் கூழானது உடலுக்குக் குளிர்ச்சியை அள்ளிக் கொடுக்கும் என்கிறார் சித்தர் அகத்தியர். போர் வீரர்களுக்குப் புஷ்டி கொடுக்கக் கம்பு அடை, கம்பு சோறு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதை வரலாற்று ஆதாரங்களின் மூலம் அறியலாம். நம்முடைய பாரம்பரிய ஊட்டச்சத்து பானங்கள், நெடுங்காலமாகக் கம்பின் துணையுடன் தயாரிக்கப்பட்டவைதான். உடல் வெப்பத்தைக் குறைப்பதுடன் நல்ல பலத்தையும் தருகிறது. கொதிக்கும் கோடைக் காலத்துக்குக் கம்பை அடிப்படையாகக் கொண்ட உணவைத் தாராளமாக உண்ணலாம். அதேவேளையில், தோல் நோய் உள்ளவர்கள் மட்டும் கம்பை அதிகம் பயன்படுத்தக் கூடாது. ‘கவி சக்கரவர்த்தி’ கம்பர்போல, ஏழைகளின் ‘மருத்துவச் சக்கரவர்த்தி’ கம்பு எனலாம்!
நலம் தரும் நன்னாரி
சுவையாலும் வாசனையாலும் மதிமயங்கச் செய்யும் நன்னாரி சர்பத், மிகச் சிறந்த குளிர்ச்சியூட்டி. நன்னாரி வேரை ஆறு மணி நேரம் நீரில் ஊறவைத்து, பின் லேசாகக் கொதிக்க வைத்து, எலுமிச்சை சாறும், சிறிது பனைவெல்லமும் சேர்த்தால் நலமான நன்னாரி சர்பத் தயார். மொகலாய சக்கரவர்த்தி பாபரின் சுயசரிதையான ‘பாபர் நாமாவில்’ சர்பத் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. `பித்தம் அதி தாகம் உழலை’ என வெப்ப அறிகுறிகளைக் களை எடுக்கும் ஆயுதமாக நன்னாரியைப் பிரயோகிக்கலாம் என்கிறார் தேரையர்.
இது உமிழ்நீர்ச் சுரப்பிகளின் (Salivary glands) செயல்பாட்டை அதிகரித்து, நாவறட்சியைப் போக்குகிறது. உடலில் உண்டாகும் வியர்வை நாற்றத்தைத் தடுப்பதுடன், ரத்தத்தையும் தூய்மை படுத்தும் (Blood purifier) நன்னாரியை, `மருத்துவத் துப்புரவாளர்’ எனலாம். நன்னாரி சர்பத்துடன் இளநீரும், நுங்கு கூழ்மத்தையும் சேர்த்து மது கலக்கப்படாத ஆரோக்கிய `காக்டைல்’ பானம், சில நூற்றாண்டுகளுக்கு முன் பிரசித்தமாக இருந்தது.
நன்னாரியில் சாப்போனின்கள், சைட்டோஸ்டீரால், வேனிலின் என முக்கிய வேதிப்பொருட்கள் உள்ளன. மனதைச் சாந்தப்படுத்தும் பொருட்களும் இதில் இருப்பதாக ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக் கின்றன. பரபரக்கும் அதிவேக மனிதர்களின் மனதைச் சாந்தப்படுத்தும் `மனசாந்தினியாகவும்’ நன்னாரி செயல்படுகிறது.
வெப்பம் தணிக்கும் கரும்புச் சாறு
சங்க கால மக்கள், கரும்பின் இனிப்பான சாற்றை விருப்பத்தோடு பருகியதாக `கரும்பின் தீஞ்சாறு விரும்பினர் மிசைமின்’ என்ற பெரும்பாணாற்றுப்படை பாடல் வரி தெரிவிக்கிறது. தேனின் சுவைக்கு ஒப்புமை கூறும் அளவுக்கு இனிப்பான கருப்பஞ்சாறு, உடலின் அழலைத் தணிக்கக் கூடியது. அதிகரித்த பித்தத்தைக் குறைத்து, வெயில் காலத்தில் உண்டாகும் நீர்க்கடுப்பையும் தடுக்கிறது.
தேகத்தில் நெருப்புபோலத் தகிக்கும் எரிச்சலைக் குறைக்க, `குளு குளு பவுடர்’ விளம்பரங்களை நம்பி ஏமாறாமல், கரும்பஞ்சாற்றோடு தயிர் சேர்த்து அருந்துவதால் தேக எரிச்சல் நிவர்த்தியாகும்’ என்று சவால் விடுகிறது சித்த மருத்துவக் குறிப்பு ஒன்று. கருப்பஞ்சாற்றோடு இஞ்சி, எலுமிச்சை கலந்த பானம், செரிமானத் தன்மையை அதிகரித்து மலச்சிக்கலைத் தடுக்கிறது. கருப்பஞ்சாறும் இஞ்சிச் சாறும் செரிமானத்துக்குத் தேவையான சுரப்புகளை (Digestive juices) அதிகரிக்கும் தன்மை கொண்டவை.
இதம் தரும் பதநீர்
பனை மரப் பொருட்களில் இருந்து கிடைக்கும் முக்கிய பானம் பதநீர். உடலுக்குக் குளிர்ச்சியையும் ஊட்டத்தையும் தரவல்லது பதநீர். விரைவில் செரிமானமாகி உடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். தென் தமிழகத்தின் அநேக இடங்களில், பதநீரில் ஊற வைத்த நுங்கை ருசிப்பது அலாதியான அனுபவம். சுவையோடு சேர்த்து வெப்பத்தையும் தணிக்கவல்லது இந்தக் கலவை. பதநீரில் சுக்கு சேர்த்துத் தயாரிக்கப்படும் சில்லுக் கருப்பட்டியின் சுவைக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை போன்றவையும் பதநீரைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.
பனை மரப் பொருட்களில் இருந்து கிடைக்கும் முக்கிய பானம் பதநீர். உடலுக்குக் குளிர்ச்சியையும் ஊட்டத்தையும் தரவல்லது பதநீர். விரைவில் செரிமானமாகி உடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். தென் தமிழகத்தின் அநேக இடங்களில், பதநீரில் ஊற வைத்த நுங்கை ருசிப்பது அலாதியான அனுபவம். சுவையோடு சேர்த்து வெப்பத்தையும் தணிக்கவல்லது இந்தக் கலவை. பதநீரில் சுக்கு சேர்த்துத் தயாரிக்கப்படும் சில்லுக் கருப்பட்டியின் சுவைக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை போன்றவையும் பதநீரைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.
காலங்களைத் தாண்டிய எலுமிச்சை
எலுமிச்சை சாற்றோடு, பனை வெல்லம் அல்லது உப்பு சேர்த்து அருந்துவதால் உற்சாகம் கரைபுரள்வதோடு, உடலின் நீர்ச்சத்தும் அதிகரிக்கும். மாரத்தான் போட்டியாளர்களும் அக்காலத்தில் மலைகளைக் கடந்து பயணம் செய்வோரும் ஆற்றலுக்குப் பயன்படுத்தியது எலுமிச்சையைத்தான். பொன் நிறத்தில் வறுக்கப்பட்ட சிறிதளவு சீரகத்தை எலுமிச்சை சாற்றில் கலந்து அருந்த, சூட்டினால் வரும் பேதி தடைபட்டு நிற்கும்.
பாரம்பரிய பானங்கள்
அரிசியைக் கழுவிய கழுநீரில் பனைவெல்லமும், சிறிது வெண்ணெயும் கலந்த காலை பானம் வெயிலுக்கு உகந்தது. சுகப் பிரசவம் உண்டாக்க, கர்ப்பிணிகளுக்கு இன்றும் சில கிராமங்களில் இந்தப் பானம் அறிவுறுத்தப்படுகிறது (அரிசி கழுவிய நீருக்குப் பதில், சீரகம்/ சோம்பு கலந்த நீரையும் பயன்படுத்தலாம்). வெப்பத்தால் ஏற்பட்ட சோர்வைப் போக்க, மோர் சேர்ந்த கேழ்வரகுக் கூழுடன், பச்சை வேர்க்கடலையைக் கலந்து கொடுக்கும் வழக்கம் வடஆர்க்காடு மாவட்டத்தில் அதிகம் உள்ளது. வெட்டிவேர், சீரகம், வெந்தயம் கலந்த தண்ணீர் உள்ளுறுப்புகள்வரை குளிர்விக்கும்.
கோடை விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு நோயுண்டாக்கும் `ஃபிரிட்ஜ்’ நீருக்குப் பதிலாக, நீரில் கருப்பட்டி கரைத்த இனிப்பு பானத்தைக் கொடுத்து மகிழ்விக்கலாம். பன்னெடுங்காலமாக உள்ள நீராகாரம், கோடைக்கு ஏற்ற இதமான பானம்.
இவை மட்டுமல்லாமல் அனைத்து பானங்களுக்கும் அடிப்படையான தண்ணீரை மண்பானைகளில் சேமித்து வைத்து, ஒரு நாளைக்கு 3 4 லிட்டர்வரை அருந்துவது அவசியம். கற்றாழைக்குள் இருக்கும் கூழ் போன்ற பகுதியை எடுத்து மோர், சீரகம் சேர்த்து மத்தைக்கொண்டு கடைந்து கிடைக்கும் குளிர்ச்சிமிக்க பானத்தை, வேனிற் காலத்தில் பயன்படுத்தலாம். கிர்ணி (முலாம்), சாத்துக்குடி, மாதுளை, திராட்சை ஆகிய இயற்கை பழச்சாறுகளைத் தாராளமாகப் பருகலாம். பழச்சாறுகளைவிட பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. இருந்தாலும் வெயில் காலத்தில் நீரிழப்பை சமன் செய்வதற்குப் பழச்சாறுகளை அருந்துவதில் தவறில்லை. சுவையூட்டச் சர்க்கரைக்குப் பதில் வெல்லத்தைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
செயற்கை பானங்களைத் தவிர்த்து, நம்மோடு உறவாடும் இயற்கை பானங்களுக்கு வாக்களித்து கோடைக் காலத்தைக் குளுமையாகக் கடத்துவோம்.
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

கோடைக்குக் கேடயமாகும் பழங்கள், காய்கள்!

கூரையில் படர்ந்த சுரை, தரையில் தவழ்ந்த பூசணி, பூமிக்குள் மறைந்த கிழங்குகள், பசுமையாகத் துளிர்த்த கீரைகள், வீடுகளைச் சுற்றி வளர்ந்த காய்கள் போன்றவற்றின் துணைகொண்டு, பண்டைய தமிழர்கள் வெயில் காலச் சமையல் நுட்பங்களை உருவாக்கினார்கள். ஒவ்வொரு பருவநிலைக்குத் தகுந்த பழங்களும் காய்களும் நம்மைச் சுற்றியே ஏராளமாய் இருக்கின்றன. காய்கள், பழங்கள் போன்றவை நமக்கு ஊட்டச்சத்தை அள்ளிக் கொடுப்பது மட்டுமன்றி, சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் நம் உடலின் இயங்குமுறையையும் முறைப்படுத்துகின்றன.
ஆதாம், ஏவாள் காலம் தொடங்கி இன்றைய `டெஸ்ட் டியூப் குழந்தைகள்’ காலம்வரை, இயற்கையின் கொடையான காய்கள், கனிகள் மற்றும் கீரைகளே ஆரோக்கியத்தை வழங்கிவருகின்றன. காலத்துக்கு ஏற்ப விளையும் காய்களையும் பழங்களையும் சாப்பிடுவதால், குறிப்பிட்ட காலநிலையை உபாதைகள் இன்றி நகர்த்தலாம். அந்த வகையில் கொதிக்கும் வெயிலின் தாக்குதலை எதிர்கொள்ளக் காய்கள், கீரைகள், கனிகளின் பங்களிப்பைப் பார்ப்போம்.
ரத்தஅழுத்தம் போக்கும் தர்ப்பூசணி
உடலின் நீர் உறிஞ்சப்படும் வெப்ப காலத்தில், தாகத்தை நிவர்த்தி செய்வதில் நீர்ச்சத்து நிறைந்த தர்ப்பூசணிக்குச் சிறப்பான இடமுண்டு. American journal of Hypertension வெளியிட்ட ஆய்வு முடிவில், தர்ப்பூசணி உயர் ரத்தஅழுத்தத்தைக் குறைப்பதாகத் தெரியவந்துள்ளது. எனவே, டென்ஷனைக் குறைக்க நினைப்பவர்கள் தர்ப்பூசணியைத் தாராளமாய்ச் சாப்பிடலாம். உடலின் நீர்ச்சத்தை அதிகரித்து, தோல் பகுதிக்கும் நல்ல ஊட்டத்தை அளிக்கிறது. இதில் 92 சதவீதம் நீர்ச்சத்து, 3.2 சதவீதம் நார்ச்சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி இதில் உள்ளன.
மற்ற காய்கள், பழங்களைவிட தர்ப்பூசணியில்தான் ‘லைகோபீன்கள்’ அதிகம். லைகோபீன்களுக்குப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலும் உண்டு. மக்னீசியம், இரும்புச் சத்து நிறைந்த இதன் விதைகளை வறுத்துச் சாப்பிடும் வழக்கம் சில மலை கிராமங்களில் உண்டு. விதைகள் இல்லாமல் உலா வரும் `ஹைபிரிட்’ வகை மலட்டுத் தர்ப்பூசணிகளைத் தவிர்ப்பது நல்லது. வெயில் கால உபாதைகளைத் தடுப்பதோடு, நாம் எதிர்பார்க்கும் அளவைவிட அதிகப் பலன்களைத் தரும் ‘தண்ணீர் பழத்தை’ மரபணு மாற்றத்துக்கு இரையாக்காமல் இருப்பது அவசியம்.
நன்மை நவிழும் நெல்லி
கோடைக் கால நோய்களைத் தடுக்க, கோட்டைபோல ‘எதிர்ப்பு சக்தியை’ தரக்கூடியது நெல்லிக்காய். மலைத்தேனில் ஊற வைத்த நெல்லிக்காய், கேரள மலைப்பகுதிகளில் கிடைக்கும் சுவையான `ஊறல் உண்டி’. நெல்லிக்காயோடு சேர்த்துத் தேனுக்கும் நோய் எதிர்ப்பு திறன் உண்டு. `தேன் நெல்லிக்காயை’ வீட்டிலேயே தயார் செய்வதால், வைட்டமின் `சி’ இல்லம் தேடி வரும். கோடை மழையால் ஏற்படும் வெப்பநிலை மாற்ற நோய்களைத் தடுக்கிறது நெல்லி. நெல்லியின் மேன்மையை அறிந்த பண்டைய தமிழர்கள், `நெல்லிக்காய் மாலையை’ கழுத்தணியாகப் பயன்படுத்தியுள்ளனர். `நெல்லியைச் சாப்பிட்டால் ஆயுள் கெட்டி’ எனப் பல நூற்றாண்டுகளுக்கு முன் சொன்ன முன்னோரது ஞானத்தை, இன்று விஞ்ஞானமும் உறுதிப்படுத்துகிறது.
விளாம் பழக் கூழ்
பனிக்கூழ் (Ice cream) சாப்பிட ஆசையா? விளாம்பழத்தின் ஓடுகளை இரண்டாகப் பிளந்து, பழச்சதையோடு தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்துக் கலக்கி, அப்படியே சாப்பிடும்போது, இயற்கையான பனிக்கூழ் நாவின் சுவை மொட்டுகளைத் தூண்டி இனிமையைத் தரும். பனிக்கூழின் முன்னோடி விளாம்பழமோ என ஆச்சரியம் அடையும் அளவுக்கு, சுவையிலும் மணத்திலும் ஐஸ்கிரீம்களைத் தோற்கடிக்கும் விளா!
விளாம்பழம், சூட்டினால் உண்டான நீர்வேட்கையைத் தடுக்கும் (வெப்பாருந் தாகமும் போம்) என அகத்தியரும், பித்தம் சார்ந்த நோய்களை நீக்கும் எனத் தேரையரும் விளாம்பழத்தின் பெருமைகளைக் கூறுவதால், வெப்பக் காலத்துக்கு உகந்தது. மட்பாண்டங்களுக்கு வாசனையைக் கொடுக்க விளாம்பழத்தை நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் என்ற செய்தியை, ‘விளாம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசி’ எனத் தொடங்கும் நற்றிணை பாடல் மூலம் அறியலாம். பீட்டா கரோட்டின், தயமின், ரிபோஃபோளோவின், டானின் ஆகிய ஊட்டச்சத்துகள் விளாம்பழத்தில் அதிகம் உள்ளன.
பலன் தரும் பழங்கள்
வெயில் காலத்தை, குளிர்ச்சியால் முலாமிடக்கூடிய பழம் `முலாம்’. சாறாகவும், நாட்டுச் சர்க்கரை சேர்த்த பண்டமாகவும் இப்பழத்தை உண்ணலாம். தாகத்தைத் தணித்து, சோர்வைப் போக்கி, உடனடியாகப் புத்துணர்வைக் கொடுக்கும். பப்பாளி, கொய்யா, ஆப்பிள், சப்போட்டா, ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, வாழை போன்றவற்றை ரசனைக்கேற்ப `சாலட்களாக’ சாப்பிடலாம். நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலத்தை எளிமையாக வெளியேற்ற இவை உதவும்.
ஸ்டிராபெரி, கிரான்பெரி, டிராகன் புரூட் மற்றும் வாயில் பெயர் நுழையாத சில பழங்களில்தான் அதிக ஊட்டம் கிடைக்கும் என்பது தப்புக் கணக்கு. நமக்கு நன்கு பரிச்சயமான நம்மூர் பழங்களிலேயே, இறக்குமதிப் பழங்களில் உள்ள சத்துகள் அனைத்தும் கிடைக்கின்றன.
நீர்க் காய்கள்
அக்னி வெயிலில் உண்ணத் தகுந்த காய் வகைகளில் நீர்த்தன்மை நிறைந்த சுரை, புடல், பீர்க்கங்காய் போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்தலாம். இவை அனைத்துக்கும் குளிர்ச்சியை உண்டாக்கும் குணம் இருப்பதோடு, நீர்த்தன்மையை உடலில் தக்கவைக்கவும் உதவுகின்றன. இவற்றைக் கூட்டாகவோ, பொறியலாகவோ செய்து சாப்பிடும்போது, சிறிது மிளகுத் தூளும் சேர்த்துக்கொள்வதால், கபம் தலை தூக்காது.
சுரைக்காயில் சாறெடுத்தும் குடிக்கலாம். வெப்பம் காரணமாக உண்டான தலைவலிக்கு நெற்றிப் பகுதியில் சுரைக்காயை வைத்துக் கட்டலாம் என்கிறது சித்த மருத்துவம். நீச்சல் பயில உதவிய சுரைக் குடுவையைப் போல, வெப்பத்தை வெல்லவும் சுரைக்காய் கண்டிப்பாக உதவும். சுரையில் 95 சதவீதம் நீர்ச்சத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. நீர்க்காய்கள் ஜீரணத்தையும் விரைவுபடுத்துகின்றன. முள்ளங்கி, வெண்பூசணி, தயிர் சேர்த்த பச்சடி (வாழைத் தண்டு / வெள்ளரி / சிறுவெங்காயம்) ஆகியவை அனலைத் தணிக்க உதவும்.
வெல்லும் வெள்ளரி
குளிர்ச்சி உண்டாக்குவது, சிறுநீர் எரிச்சலைக் குறைப்பது, நீர்வேட்கையை நிவர்த்தி செய்வது என வெயிலை எதிர்த்து முன்னின்று போராடும் `படை தளபதி’ வெள்ளரி. இதன் விதைகளுக்குச் சிறுநீர் பெருக்கும் செய்கை இருப்பதால் கோடைக் காலத்தில் உண்டாகும் நீர்ச்சுருக்கு, சிறுநீர் எரிச்சல், கல்லடைப்பு போன்றவை வராமல் பாதுகாக்கும். `முள்ளரித் தியற்றிய வெள்ளரி வெண்சோறு’ எனத் தொடங்கும் `மலைபடுகடாம்’ பாடல், வெள்ளரி சேர்த்துச் சாதம் சமைத்ததாகக் குறிப்பிடுகிறது. பாடல் குறிப்பிடும் வெள்ளரி சாதம் பரிமாறப்பட்டபோது, சங்கக் காலத்தில் வேனிற் காலமாக இருந்திருக்கலாம்! வெடிப்புகள் உண்டான வெள்ளரி பழத்தின் சதையோடு, பனைவெல்லம் கலந்து உண்பது குளிர்ச்சியானது, சுவையானதும்கூட. கடந்த தலைமுறையினருடைய வேனிற் விடுமுறையின் விருப்பப் பண்டம் இந்த வெள்ளரி பழம்.
குளிர்ச்சி தரும் கீரைகள்
வைட்டமின்கள், தாதுகளின் தொழிற்சாலையாக விளங்கும் கீரை வகைகள், உடலில் குளிர்ச்சியை நிலைபெறச் செய்யக்கூடியவை. அதிகமாக நாம் பயன்படுத்தத் தவறிய கொடிப் பசலைக்கீரை, வெயில் காலத்துக்கே உரிய ‘சிறப்பு மருத்துவர்’. பருப்பு சேர்த்துப் பசலை கீரையைக் கடைந்து சாப்பிட, அழல் தணிந்து சிறுநீர் எரிச்சல் மறையும். Lutein, zea-xanthin போன்ற எதிர்-ஆக்ஸிகரணப் பொருட்கள் கொடிப்பசலையில் அதிகம். சிறுகீரை, பருப்புக்கீரை, பொன்னாங்கண்ணி, வெந்தயக்கீரை, தண்டுக்கீரை என வெயில் காலம் முழுவதும் கீரைகளை மாற்றி மாற்றி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மலத்தை முழுமையாக வெளியேற்றுவதில் கீரைகளுக்கு முக்கியப் பங்குண்டு. கீரை வகைகளை இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டும். நோய்களை எதிர்த்துப் போராட ஆதிமனிதர்களிடம் இருந்த ஆயுதங்களே காய்கனிகள்! இப்போது நோய்களோடு பாதி மனிதர்களாய் வாழும் நம்மிடமும் அந்த ஆயுதங்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி நோயில்லா முழு மனிதர்களாக மாறுவோம். வெயில் காலத்துக்கு ஏற்ப நம் உடலைத் தகவமைக்க உதவும் பழங்கள் மற்றும் காய்களை, வயிற்றுக்குப் பரிசளித்தால் வேனலும் இனிதே!
கோடைக் கால எச்சரிக்கை!
# குழந்தைகளுக்குத் தகுந்த இடைவெளிகளில் நீர் கொடுப்பது அவசியம்.
# பழச்சாறுகளைப் பொறுத்த வரையில் வீட்டிலேயே தயார்செய்து கொடுக்கலாம். அதிகக் குளிர்ச்சிக்காக ஐஸ் கட்டிகளைச் சேர்ப்பதால், குழந்தைகளுக்கு உடனடியாகச் சளி, இருமல், காய்ச்சல் வர வாய்ப்புகளுண்டு.
# முதியவர்களுக்குத் தாக உணர்வு சிறிது குறைந்தே இருக்கும். தனி அக்கறையுடன் அவர்களுக்கும் நீர்ச்சத்து மிகுந்த ஊட்டங்களை அளிப்பது முக்கியம்.
# ஒரே நேரத்தில் அதிக நீரைப் பருகாமல், தாக உணர்வுக்கு ஏற்ப நீரைப் பருகலாம்.
# பழ வகைகளைக் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுத்த உடனே சாப்பிடக் கூடாது. இதனால் பல் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றன ஆராய்ச்சிகள். இவற்றைத் தவிர்க்கப் பழங்களை வாங்கியவுடன் சாப்பிடுவதே உசிதம்.

முதுமை என்றால் எந்த வயது?

நாற்பது வயது என்பது இளமையில் முதுமை. ஐம்பது வயது முதுமையில் இளமை’ என்கிறார் ஹோசா பாலோ. ஆனால், இளமையைக் கொண்டாடும் சமூகம் முதுமை என்றால் முகம் சுளிக்கிறது.
முகத்தில் சுருக்கம், உடலில் குடிகொள்ளும் நோய்கள், தள்ளாடும் நடை, பெற்ற குழந்தைகளின் புறக்கணிப்பு, தனிமை இப்படி நீளும் பட்டியலில் முதுமைக்கு எது பெருமை என்று தானே எண்ணுகிறீர்கள். ஆனால், நான் பயணித்த சில நாடுகளில் சந்தித்த முதியவர்கள், முதுமையைப் பற்றிய எண்ணங்களை மாற்றிவிட்டனர்.
மலை முழுக்க நெல்
சீனாவின் மிகப் பிரபலமான குபின் சுற்றுலாத்தலத்துக்கு அருகாமையில் இருக்கும் லாங் ஷெங்கிலிருந்து 27 கி.மீ. தொலைவில் இருக்கிறது லாங்ஜி என்கிற கிராமம், இங்கு டிராகன் பேக்போன் ரைஸ் டெரஸ் என்கிற நெல் வயல்கள் புகழ்பெற்றவை.
கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டரிலிருந்து 11,000 மீட்டர்வரை உயர்ந்திருக்கும் மலைகள், குன்றுகளில் மொத்தம் 16,308 ஏக்கர் பரப்புக்குச் சுற்றிச் சுழன்று உச்சிவரை செல்லும் வயல்வரப்புகளில் நெல்லை விதைத்து வளரச் செய்துள்ளனர். 1271-1368-ல் யுவான் வம்ச ஆட்சி காலத்தில் தொடங்கிய இந்தச் சிரமமான வேலை 1644-1911-ல் குவிங் வம்ச ஆட்சிவரை நீடித்திருக்கிறது. இந்தப் பகுதியில் வாழும் ஸுவாங் மக்களின் கடின உழைப்பே இந்தச் சாதனையைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
அசந்துபோனேன்
இந்த மலைகளில் ஒன்றில் ஏறிக் குன்றுகளில் பயிர் செய்யப்பட்டிருக்கும் நெற்கதிர்களையும் அவற்றைத் தாங்கி நிற்கும் டிராகன் முதுகெலும்பு வயல்களையும் பார்க்க நானும் என் கணவரும் ஏறிக்கொண்டிருந்தோம்.
இது மிக உயரமான மலை, உங்களால் ஏற முடியாது என்று ஆட்களைச் சுமந்து செல்லும் டோலிகளை தூக்கிக்கொண்டு கிராமத்து ஆட்கள் ஓடிவந்தனர். அதைத் தள்ளி வைத்துவிட்டு, நாங்கள் ஏறத் தொடங்கினோம். பாதித் தொலைவு ஏறியவுடன் மூச்சிரைக்க ஆரம்பித்தது. சிறிது சிரமப்பட்டு ஏறினோம். ஆனால், எங்களைப் பின்தள்ளி விட்டு ஏழு, எட்டு லாங்ஜி கிராமத்துப் பெண்கள் குடுகுடு என்று மேலே ஏறிச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் தாவித்தாவி ஏறிக்கொண்டிருந்ததைப் பார்த்து அசந்து போனேன்.
“இதற்கே இப்படி ஆச்சரியப்படுகிறீர்களே, அவர்களுடைய வயதைக் கேட்டால் என்ன சொல்வீர்கள்?” என்று தன் தோள்களைக் குலுக்கிக்கொண்டே சொன்னார் எங்களுடன் வந்த சுற்றுலா வழிகாட்டி.
“அவர்களுக்கு ஒரு அறுபது வயது இருக்குமா?” என்று தயங்கியபடியே நான் சொன்னேன். அதற்குக் கைகளைக் கொட்டிச் சிரித்த அந்த வழிகாட்டியைக் கேள்விக்குறியுடன் பார்த்தேன்.
“அவர்கள் அனைவரும் 90 வயதைக் கடந்தவர்கள்” என்றாரே பார்க்க வேண்டும். “என்ன உண்மையா, இந்த வயதிலும் இப்படி ஒரு வேகமா” என்று அசந்து போனேன்.
“லாங்ஜி மக்களின் வாழ்க்கைமுறையும் சுற்றுச்சூழலும்தான் அவர்களுடைய ஆரோக்கியத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் அடிகோலியிருக்கிறது” என்றார்.
முதுமையிலும் இளமை
வயதைத் தள்ளி வைத்துவிட்டு எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது, ஆவியில் வேக வைத்த காய்கறிகள், அவித்த பருப்பு வகைகள், அரிசி உணவு, எண்ணெயில் பொரித்து எடுக்காத மீன் வகைகள், சொந்தப் பந்தங்களுடன் கூடி வாழ்வது, இயற்கையோடு இயைந்த வாழ்க்கை, போதும் என்ற மனம், போட்டி - பொறாமை அற்ற மகிழ்ச்சியான வாழ்க்கை போன்றவை இவர்களிடையே நோய்களையும் வயோதிகத்தையும் விரட்டி முதுமையிலும் இளமையாக வைத்திருக்கிறது.
ஜப்பான் நாட்டிலும் எண்பது வயதைக் கடந்த முதியவர்கள் வேகமாகச் சைக்கிள் ஓட்டிப்போவதைப் பார்த்திருக்கிறேன். அத்துடன் பூங்காக்களில் தாய்ச்சி எனப்படும் உடற்பயிற்சியைச் செய்துகொண்டிருப்பார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் முதிய பெண்கள் நேர்த்தியாக உடை அணிந்துகொண்டு, கேளிக்கை இடங்களில் இளைஞர்களுக்கு இணையாக விளையாடி மகிழ்கிறார்கள். அவர்கள் அடிக்கடி மேற்கொள்ளும் ஹெல்த் செக்கப் மூலம் கிடைக்கும் தெளிவு, செயல்படுவதற்கான சக்தியைத் தருகிறது.
ஒளிரும் தன்னம்பிக்கை
நியூயார்க் நகரத்தில் ஓர் உணவகத்தில் எண்பது வயதைக் கடந்த ஒரு பெண், முதுகில் ஆக்சிஜன் சிலிண்டரைச் சுமந்தபடி உட்கார்ந்து உணவு அருந்திக்கொண்டிருந்ததைப் பார்த்து அசந்து போனேன்.
மெதுவாக அவரிடம் சென்று அவரின் மனோதிடத்தைப் பாராட்டினேன். “நான் என்னுடைய வாழ்க்கையை, அதனுடைய கடைசி விநாடிவரை மகிழ்ச்சியாகக் கழிக்க விழைகிறேன்” என்றார்.
இப்படிப்பட்ட மனோபாவம் இருந்தால், முதுமையும் அதைத் தொடரும் இன்னல்களும் சூரியனைக் கண்ட பனியாக மறைந்துபோகும். முதுமையிலும் இனிமை காணலாம்.

Wednesday, May 11, 2016

தாய்ப்பால் நன்கு சுரக்க என்னென்ன உணவுகளை சாப்பிடலாம்?

தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பிறந்த குழந்தைக்கு ஊட்டச்சத்தும, எதிர்ப்பு சக்தியும் தாய்ப்பாலில்தான் உள்ளது. வேறெந்த பாலிலும் இல்லை என்பதை அடித்து சொல்லமுடியும்.
அத்தகைய பால் சில சமயங்களில் தாய்க்கு சுரக்காமல் போவதுண்டு. பால் கொடுக்கும் தாய்மார்கள் கட்டாயம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். சிலர் வாய்வு தரும் உணவுகளை சாப்பிட மாட்டார்கள். அது முற்றிலும் தவறு. எல்லா வகை காய்களையும் சாப்பிடலாம்.
தாய்ப்பால் சுரக்காததிற்கு காரணம் :
போதிய ஊட்டச்சத்து இல்லாம இருந்தால் , கோபம் , டென்ஷன் ஆகியவைகளிலாலும் அல்லது காரணங்களே இல்லாமலும் பால் சுரப்பது குறையும். இதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. தாய்ப்பாலின் சுரப்பை தூண்டும் உணவுவகைகள் நிறைய உள்ளன. அவற்றை நாள் தோறும் உணவில் சேர்த்து மகிழ்ச்சியுடன் இருந்தாலே பால் நன்றாக சுரக்கும்.
பூண்டு :
பூண்டு பால் சுரப்பினை அதிகப்படுத்தும் அமிலத்தினைக் கொண்டுள்ளது. அந்த காலங்களில் பூண்டை நெய்யில் வதக்கி அம்மாக்களுக்கு கொடுப்பார்கள். தினமும் பூண்டினை உணவில் சேர்த்துக் கொண்டால் பால் கட்டாயம் சுரக்கும். முயன்று பாருங்கள்.
சிவப்பு காய்கறிகள் :
சிவப்பு நிறத்தில் உள்ள காய்கறிகளில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. அவை பால் சுரப்பிகளை தூண்டி விடுகின்றன. இதனால் பால் நன்றாக சுரக்கும்.
கேரட் , பீட்ரூட், பப்பாளி , சர்க்கரை வள்ளிக் கிழங்கு , அரசாணிக்காய் போன்ற காய்களை கட்டாயம் சாப்பிட வேண்டும்.
நட்ஸ் மற்றும் பழங்கள் :
முந்திரி பாதாம் , வேர்க்கடலை உலர் திராட்சை ஆகியவை பால் சுரப்பினை அதிகப்படுத்தும். அவற்றை வறுத்து சாப்பிடலாம். பாதாப் பால் குடிக்கலாம். மேலும் பழங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கல் வராமல் இருக்க நிறைய நீர் குடிக்க வேண்டும்.
திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும் :
பழச்சாறுகள் , நிறைய நீர் ,கஞ்சி ஆகியவற்றை போதிய இடைவெளியில் எடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். இது தாயின் உடலில் நீர் வற்றாமலும், ரத்தத்தை சுத்தம் செய்து ரத்த விருத்தியாகும்.இதனால் பால் அதிகம் சுரக்கும்.
வெந்தயம் :
வெந்தயத்தில் அதிகமாய் இரும்பு சத்துக்களும் , கால்சியம் , விட்டமின் அதிகம் உள்ளது. ஆகவே வெந்தயத்தை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் பால் அதிகம் சுரக்கும். வெந்தயத்தை முந்தைய இரவில் ஊற வைத்து , மறு நாள் அந்த நீரினை குடிக்கலாம். ஊறிய வெந்தயத்தை சமையலில் சேர்த்துக் கொண்டால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
கருப்பு எள் :
கருப்பு எள்ளில் கால்சியம் மற்று காப்பர் உள்ளது. இது பால் சுரப்பினை தூண்டும்.ஆகவே அவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இரும்பு சத்து நிறைந்த காய்கறிகள் :
ரத்த சோகை ஏற்பட்டாலும் தாய்ப்பால் சுரக்காது. ஆகவே இரும்பு சத்தி நிறைந்த காய்கறிகள் சாப்பிட வெண்டும். இது ரத்தத்தை விருத்தியாக்கும்.
தாய்ப்பால்தான் பிறந்த குழந்தைக்கு ஊட்டம் , அறிவு மற்றும் வாழ் நாள் முழுவதும் வாழத்தேவையான அடிப்படை சத்துக்களை கொடுக்கிறது. மேலும் மன அமைதியோடு பால் கொடுக்கும்போது அதன் சத்துக்கள் முழுவதும் குழந்தைக்கு போய் சேர்வதாக ஆய்வு கூறுகின்றது.
ஆகவே அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கூடுமானவரை வேற்றுப்பாலை தவிர்த்து விடுங்கள். தாய்ப்பால் சுரக்க மேலே சொன்ன வழிகளை பின்பற்றி மகிழ்ச்சியோடு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்திடுங்கள்.

Thursday, April 28, 2016

குழந்தைகள் விரும்பும் பள்ளிகள் எப்படி இருக்க வேண்டும்...?



ன்று வேண்டா வெறுப்பாகத்தான் அந்த பள்ளிக்கு சென்றேன். மரங்கள் சூழ, லாரி பேக்கர் ( உலகம் கொண்டாடும் கட்டட கலைஞர் ) கட்டட அமைப்பில் கட்டப்பட்டிருந்த, குழந்தைகள் முகத்தில் எந்த வெறுப்பும் இல்லாமல் சந்தோஷமாக பட்டாம்பூச்சியை துரத்தி சென்று கொண்டிருந்த அந்த பள்ளிக்கு நான் அன்று வேண்டா வெறுப்பாகத்தான் சென்றேன்.

 
தருமபுரி மாவட்டத்தின் முன்னாள் தொடக்க கல்வி அலுவலர், அலுவல் நிமித்தமாக தருமபுரி மாவட்டத்தில் காடுகள் சூழ இருக்கும் நாகர்கூடல் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்றதாகவும், அந்த பள்ளி பயிற்றுவிக்கும் முறை, கட்டட அமைப்பு வித்தியாசமாக இருந்ததாகவும், முக்கியமான அந்த பள்ளியின் தாளாளர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், நான் அந்த பள்ளியை ஒரு முறையேனும் நேரில் பார்வையிட வேண்டும் என்றும் அவர் சொல்லிய போது, எந்த சுவாரஸ்யமும் இல்லாமல், நான் வேண்டா வெறுப்பாகத்தான் அந்த பள்ளிக்கு சென்றேன்.

அரசின் பங்களிப்பில்லாமல் இயங்கும் பள்ளிகள் அனைத்தும், பெரும்பாலும் பணத்தை நோக்கமாக கொண்டது என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை. அதனால்தான் அந்த பள்ளிக்கு வேண்டா வெறுப்பாக சென்றேன். மாணவர்கள் மற்றும் தாளாளருடான அந்த நெடிய  உரையாடல் அந்த எண்ணத்தை மாற்றியது. நாம் பார்க்காவிட்டாலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக மாற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை புரிய வைத்தது.

இவ்வளவு தீமைகளுக்கு பின்பும் இவ்வுலகம் எப்படி இயங்கி கொண்டிருக்கிறது என்று என்னுள் அவ்வப்போது எழும் கேள்விக்கு... ‘இன்னும் இவர்களால்தான் இவ்வுலகம் சிறிதேனும் அறத்துடன் இயங்கி கொண்டிருக்கிறது' என்று புரிய வைத்தது...’

பீடிகை போதும், வாருங்கள் பள்ளிக்கு போவோம்...
அந்த பள்ளியில் நான் இருந்த சில மணி நேரங்களில் பெற்ற அனுபவத்தை, அடைந்த பரவசத்தை, உங்களுக்கு அப்படியே கடத்தும் சொல் ஆளுமை எனக்கில்லை. இருந்தாலும் முயல்கிறேன்...
புவிதம் - காட்டுப் பள்ளி:

புவிதம், இது அந்த பள்ளியின் பெயர். ஏன் புவிதம்...? அதை பின்பு காண்போம். நான் ஏன் அதை காட்டுப் பள்ளி என்கிறேன்...? நிச்சயம் அது காடுகள் சூழ இருப்பதால் மட்டும் அல்ல. காடுகளில் எப்படி மரங்கள் அதன் இயல்பில் வளருமோ, அது போல்தான் இங்கும் குழந்தைகள் அதன் இயல்பில் வளர்கிறார்கள். குழந்தைகள் மீது எந்த ரசாயனங்களும் தெளிக்கப்படுவதில்லை (ரசாயனங்கள் என்று நான் குறிப்பிடுவது, நம் விருப்பங்கள், பணம் சார்ந்து நமக்குள் இருக்கும் மதிப்பீடுகள், சக மனிதனை போட்டியாளராக கருத வைக்கும் நம் கருத்துகள்). இவை எதுவும் அங்கு மாணவர்கள் மீது திணிக்கப்படுவதில்லை. அதனால்தான் அதை காட்டு பள்ளி என்கிறேன்.

நான் அந்த பள்ளிக்கு சென்றது ஒரு வெண்மேகம், தன் ஒளிக்கீற்றை பரப்பிய ஒரு காலை வேளையில். குழந்தைகள், கைகளில் குடம், களை கொத்தியுடன் பரபரப்பாக அங்கு இங்கும் சென்று கொண்டிருந்தார்கள். “பசங்களா... எங்கடா போறீங்க... ?” என்று ஒரு மாணவனை இடைமறித்து கேட்டபோது, “அண்ணா.... நாங்க பள்ளி தோட்டத்தில காய்கறிகள் விதைத்து இருக்கோம்னா... அதுக்கு தண்ணி ஊத்தப் போறோம்...?” என்று சொல்லிவிட்டு குடுகுடுவென ஓடினான்.

அவனை பின் தொடர்ந்து சென்றபோது, மாணவர்கள் பள்ளியின் பின் புறம் உண்டாக்கி உள்ள காய்கறி வனத்தை அடைந்தேன். முதிர்ந்த விவசாயிகள் போல், ஒரு ஒருங்கிணைந்த பண்ணையையே அந்த மாணவர்கள் உண்டாக்கி இருந்தார்கள்.

அவர்களுடன் பேச்சு கொடுத்தேன்.
“அண்ணா... நாங்க கீரை, உருளைக் கிழங்கு, சுரைக்காய், பீர்க்கை எல்லாம் போட்டு இருக்கோம்னா.... எட்டாவது படிக்கிற அண்ணன் எல்லாம் சேர்ந்து, சோளம் போட்டு இருக்காங்க...” என்றாள் நான்காம் வகுப்பு படிக்கும் தமிழ்ச்செல்வி.
பள்ளி மணி ஒலிக்கிறது. மாணவர்கள் உற்சாகமாக கை கால்களை கழுவிவிட்டு வகுப்பிற்கு செல்கிறார்கள்.

“மிஸ்... கிளாசுக்குள் வேண்டாம்... இன்னைக்கு மரத்தடியில் வகுப்பெடுங்க...” என்கிறான் ஐந்தாம் வகுப்பு மாணவன். மற்ற மாணவர்கள் எல்லாம் அவனை வழிமொழிகிறார்கள். அன்றைய வகுப்பு மர நிழலில் நடக்கிறது. அதே வகுப்பை சேர்ந்த இன்னொரு மாணவன், “மிஸ் எனக்கு இன்னைக்கு ரொம்ப சலிப்பா இருக்கு... நான் ஓவியம் வரையட்டுமா..” என்கிறான். அவனை அந்த ஆசிரியர் அனுமதிக்கிறார்.

மாணவர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள். இப்படியாகதான் இருக்கிறது புவிதம் பள்ளி.

அமைதிக்கான ஒரு தேடல்...

உங்களுக்கு அந்த பள்ளியின் தாளாளர் மீனாட்சியை பற்றி கூறிவிடுகிறேன். அப்போதுதான், அந்த பள்ளியை பற்றி புரிந்து கொள்ள சுலபமாக இருக்கும்.

மீனாட்சி,  உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். புனேவில் கட்டடக்கலை படித்தவர். உலகம் கொண்டாடும் கட்டட கலை கலைஞரான லாரி பேக்கரின் நேரடி மாணவர். புனேவில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளால் மனம் வாடி, அமைதியை தேடி 1992-ம் ஆண்டு தமிழகம் வந்தவர். தான் விரும்பும் அமைதியான இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை, கிராமங்களில்தான் இருக்கிறது என்று உணர்ந்து தருமபுரி மாவட்டம், நாகர் கூடல் பகுதியில் கணவர் உமேசுடன் குடியேறியவர்.
'நாம் பள்ளிகளில் வன்முறையை பயிற்றுவிக்கிறோம்...'

இனி, மீனாட்சியுடனான உரையாடல்...

உங்களுடன் பேச நிறைய இருக்கிறது. முதலில், உங்கள் பள்ளியின் பெயரில் இருந்தே தொடங்குகிறேன். ஏன் பள்ளிக்கு புவிதம் என்று பெயர்...?

"நாங்கள் நேரத்திற்கு பின்னால் ஓடுவதில்லை. நாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்" என்று சோளக்கூழைத் தந்துவிட்டு பேச துவங்குகிறார். "நான் இந்த புவிக்கு சுமையாக இருக்க கூடாது, அதனுடன் இயைந்து வாழ வேண்டும் என்று விரும்புபவள். அதனால்தான் பள்ளிக்கு அப்படியொரு பெயர் வைத்தேன்."

புரியவில்லையே...?

"புவிதம் = புவி + இதம். அதாவது புவிக்கு இதமாக இருப்பது. எங்கள் பள்ளி அப்படிதான் இயங்குகிறது."

தமிழை தாய் மொழியாக கொண்டிருக்கும் எங்களுக்கே, தமிழ் தகராறாக இருக்கிறது. ஆனால், ஹிந்தியை தாய் மொழியாக கொண்ட உங்கள் மொழி அறிவு வியக்க வைக்கிறதே...?

"அப்படியெல்லாம் இல்லை. நான் தமிழகம் வந்து ஏறத்தாழ 25 ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனால், நான் இன்னும் தமிழ் மாணவிதான். இன்னும் தமிழ் பயின்று கொண்டுதான் இருக்கிறேன்."

சரி. மீண்டும் விஷயத்திற்கு வருவோம். மறைமுகமாக இல்லாமல் நேரடியாக கேட்கிறேன். நீங்கள் பள்ளி துவங்கியதற்கான நோக்கம் என்ன...? நீங்கள் மாணவர்களிடமிருந்து கட்டணமும் வாங்குவது இல்லை என்று அறிகிறேன்... கல்வி பணம் ஆகிவிட்ட சூழலில், உங்கள் நோக்கம்தான் என்ன...? 
"இந்த பள்ளி என் சுயநலத்தின் நீட்சி. இங்கு குடிபெயர்ந்தவுடன், என் வீட்டில் இந்த கிராம குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் டியூசன் எடுக்க துவங்கினேன். எங்கள் மகள் கயாவும் வளரத் தொடங்கினாள். குழந்தைகள் மீது வன்முறையை திணிக்கும் பள்ளிகளில் என் மகளை சேர்க்க விருப்பமில்லை. அதே நேரம் மாலை நேரத்தில் என்னிடம் பயிலும் மாணவர்களும், முழு நேரமாக இங்கு படிக்க விரும்பினார்கள். என் மகளுக்காகவும், அந்த குழந்தைகளுக்காகவும்தான் இந்த பள்ளியை துவங்கினேன்."

'வன்முறையை திணிக்கும் பள்ளிகள்’. நீங்கள் வன்முறை என்று எதனை குறிப்பிடுகிறீர்கள்...?


"ஆம். வன்முறைதான். குழந்தைகள் அனைவரும் எட்டு மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்று நினைப்பது, அவர்களை அமர்ந்திருக்க வைப்பது வன்முறை இல்லையா...?. அவர்கள் எவ்வளவு இறுக்கமாக இருப்பார்கள், அதை நீங்கள் உணரவில்லையா... சரி.. மற்றவர்களை விடுங்கள்... நீங்கள் எவ்வளவு இறுக்கமாக இருந்திருப்பீர்கள்...? இந்த இறுக்கம் அவர்கள் சுயமாக சிந்திப்பதை தடுக்கிறது. அவர்கள் சுயத்தை அழிக்கிறது. அவர்கள் தன்னம்பிக்கையை சிதைக்கிறது. அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிட வேண்டும். ஒப்பீட்டளவில், அரசாங்க பள்ளிகள் மிகவும் சுதந்திரமானது. அங்கு பயிலும் மாணவர்கள்தான் அதிக தன்னம்பிக்கை உடையவராக காணப்படுகிறார்கள்."

பள்ளிகள் மாறவேண்டும் என்கிறீர்கள். ஆனால், பாடத்திட்டமே மோசமாகதானே இருக்கிறது...? 

"சமச்சீர் கல்வி எவ்வளவோ பரவாயில்லை. அது மாணவர்களை சிந்திக்க தூண்டுகிறது. அதிலும் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. ஆனால், நாங்கள் பயிற்றுவிக்கும் முறை மூலம் அதை இலகுவாக்குகிறோம். அதாவது சிறு கதைகள், பாடல்களை நாங்களே உண்டாக்குகிறோம். அதில் பாடத்திட்டத்தில் உள்ள விஷயங்களை கொண்டு வருகிறோம். அது கற்றலை சுலபமாக்குகிறது.

மேலும், இங்கு Ranking முறை இல்லை... இங்கு நடக்கும் தேர்வானது, மாணவர்களின் அறியாமையை அளக்கும் அளவுகோலாக இருப்பதில்லை; மாணவர்களை சிந்திக்க தூண்டுவதாக இருக்கிறது. இங்கு bilingual ஆக தமிழிலும், ஆங்கிலத்திலும் பாடம் நடத்துகிறோம். அதனால் அவர்கள் மொழி அறிவும் சிறப்பாக இருக்கிறது.

அதே நேரம், உங்களுக்கு இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன். மாற்றத்தை விரும்பும் நாங்கள் சிறு குழு. எங்களுக்கென்று சில வரம்புகள் உண்டு. அதில்தான் நாங்கள் வேலை செய்ய முடியும்."
எனக்கு நன்றாக புரிகிறது. சரி, பெற்றோர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது. அவர்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளியில் தோட்ட வேலை செய்ய எப்படி அனுமதிக்கிறார்கள்...?

"பெற்றோர்களின் மனநிலையும் நிச்சயம் மாற வேண்டும். சிலர், பள்ளி என்பதை பாடத்திட்டத்தை கற்பிக்கும் இடமாக மட்டும்தான் பார்க்கிறார்கள். எங்களை பொறுத்தவரை பள்ளி என்பது வாழ்வியலை பயிற்றுவிக்கும் இடம். மாணவர்கள் விவசாயத்தையும் கற்க வேண்டும். அப்போதுதான் நாளை அவர்கள் அரசு அதிகாரிகளாக அல்லது அரசு கொள்கைகளை வடிவமைக்கும் இடத்திற்கு செல்லும்போது, மக்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு கொள்கைகளை வடிவமைப்பார்கள். நாங்கள் விவசாயம் மட்டும் சொல்லித் தரவில்லை, நெசவு தொழில், கட்டடக் கலையையும் சொல்லிக் கொடுக்கிறோம்.அதாவது மாணவர்கள் சுயச்சார்புடன் இருக்க பயிற்றுவிக்கிறோம்.

மேலும், இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளை அவர்களுக்கு மதிய நேரத்தில் வேக வைத்து தருகிறோம். ரசாயனம் இல்லாமல் இயற்கை முறையில் அவர்களே வளர்த்த காய்கறிகளை அவர்கள் உண்ணுகிறார்கள்."

ஹூம். கட்டட கலை என்றவுடன்தான் நினைவிற்கு வருகிறது, பள்ளிகளின் கட்டடம் வித்தியாசமாக உள்ளதே...?

"லாரி பேக்கர் முறையில் கட்டப்பட்ட கட்டடங்கள் இவை. அதாவது, மாணவர்களுக்கு இயற்கையை சுரண்டக் கூடாது என்று நாம் கற்று தரும்போது, அவர்களின் சூழலும் அது மாதிரிதானே இருக்க வேண்டும். இந்த கட்டடங்களில் அதிக அளவில் சிமெண்ட் பயன்படுத்தப்படவில்லை. இயற்கையை சுரண்டி கட்டவில்லை. இந்த இடத்தில் என்ன பொருள் கிடைக்கிறதோ, அதை கொண்டு கட்டி உள்ளோம். மேலும், பகலில் இந்த கட்டடங்களில் தேவையான அளவிற்கு வெளிச்சமும், காற்றும் இருக்கும். அதனால், மின்விசிறியும், விளக்கும் தேவையில்லை. குழந்தைகளிடம், அணு உலையால், அனல் மின் நிலையத்தால் சூழல் கேடு என்று பயிற்றுவிக்கும் முன், மின்சாரத்தை விரயமாக்காமல் இருக்கவும் சொல்லிக் கொடுக்க வேண்டும்."

நீங்கள் புனேவில் சமூக ஏற்றத்தாழ்வுகள் பொறுக்காமல் தமிழகம் வந்தீர்கள். உங்கள் மாணவர்களிடம் அந்த சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்து பேசி உள்ளீர்களா...?

"நிச்சயமாக. அனைவரையும் சமமாக மதிக்க கற்றுத் தருகிறோம். பணம் மட்டுமே பிரதானம் இல்லை என்கிறோம். இந்த புவி நமக்கு மட்டுமானது இல்லை, அனைத்து ஜீவராசிகளுக்குமானது என்று சொல்லி தருகிறோம். இதையெல்லாம் வெறும் வார்த்தைகளில் மட்டும் சொல்லி தராமல், அது போல் வாழவும் பயிற்றுவிக்கிறோம்."

எல்லாம் மிகவும் சிறப்பாக உள்ளது. ஆனால், உங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரைதான் உள்ளது. மேல் படிப்பிற்கு மீண்டும் வழக்கமான பள்ளிகளுக்குதான் செல்ல வேண்டும். அதை எப்படி உங்கள் மாணவர்கள் எதிர் கொள்கிறார்கள்...? 

"ஆம். ஆனால் நான் முன்பே கூறியது போல், எங்களால் எல்லாவற்றையும் மாற்ற முடியாது. வழக்கமான பள்ளிகளுக்கு இங்கிருந்து செல்லும் மாணவர்கள், அதில் தங்களை பொறுத்திக் கொள்ள சில காலம் எடுக்கிறது. ஆனால், அடித்தளம் சிறப்பாக உள்ளதால் அதிலும் நல்ல மதிப்பெண்களையே எடுக்கிறார்கள். புரிந்து கொண்டு பயில்கிறார்கள்." என்று சொன்ன மீனாட்சி,  பேட்டியின் முடிவில் ஒரு விஷயத்தை சொன்னார். அதுவே இந்த கட்டுரைக்கும் சிறந்த முடிவுரையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

“மனிதர்கள் தங்கள் வாழ்வின் முக்கியமான ஒரு பெரும் பகுதியை பள்ளிகளில் கழிக்கிறார்கள். அதனால், அந்த இடம் அவர்களுக்கு பிடித்தமான இடமாக இருக்க வேண்டும். அவர்கள் விரும்பி கற்க வேண்டும். இறுக்கமான சூழல் இருக்க கூடாது. நாம் மோசமான முறையில் அவர்கள் மீது ஒன்றை திணிக்கும் போது, மோசமான ஒன்றைதான் அறுவடை செய்ய முடியும். நாம் அன்பையும், அறத்தையும் நல்ல சூழலில் விதைத்தால், இந்த பிரபஞ்சம் பூக்களால் நிறையும்.”

ஆம். புவிதம் முழுவதும் பூக்கள் பூத்து குலுங்குகிறது.

- மு.நியாஸ் அகமது