Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Saturday, April 23, 2016

அமிர்த கரைசல், ஜீவாமிர்தம்......

அமிர்த கரைசல்
பச்சை பசுஞ்சாணம் -10kg
பசுவின் கோமியம் -10லிட்
நாட்டு சர்க்கரை -250g
தண்ணீர் -100lit
இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்த நாளே இந்த கரைசல் தயாராகி விடும்.இதை 10% கரைசலாக பாசன நீருடன் கலந்து விடலாம்.அல்லது தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம்.பாசன நீருடன் கலந்து விட ஏக்கருக்கு 50லிட்டர் தேவைப்படும்.தெளிப்பு உரமாகவும் பயன்படுத்த 10லிட்டர் போதும்.இது மண்ணின் வளம் மற்றும் நலத்தையும் கூட்டி பயிர்கள அனைத்திற்கும் நன்மை பயக்கும்.
பிரம்மாஸ்திரா
மூன்று கிலோ அளவிலான வேப்பங்குச்சிகளை விழுதாக அரைக்கவேண்டும். இதனுடன் சீத்தா, புங்கன், ஆமணக்கு, பப்பாளி, கொய்யா, ஊமத்தை, கருவேலம், பாகல் ஆகியவற்றின் இலைகளை தலா இரண்டு கிலோ வீதம் சேர்த்து அரைக்கவேண்டும் (ஏதாவது ஐந்து இலைகள் இருந்தால் கூட போதும். இலைகளை அப்படியே போட்டால், பிரம்மாஸ்திரம் தயாராவதற்கு நாள் பிடிக்கும்). இவற்றைப் பத்து லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கலந்து அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு 48 மணி நேரம் குளிர வைத்து, வடிகட்டி, பயிர்களுக்கு தெளிக்கலாம். இந்தக் கரைசலை ஆறு மாதம் வரை சேமித்து வைத்திருக்கலாம்.
அக்னி அஸ்திரம்
புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.
சுக்கு அஸ்திரா
சுக்குத் தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பின்பு குளிர வைக்கவும். பசு அல்லது எருமைப் பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரம் தவிர்த்த பிற பாத்திரங்களில் கொதிக்க வைக்கவும். படிந்திருக்கும் ஆடையை எடுத்து விடவும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். இது சிறந்த பூஞ்சானக் கொல்லியாகும். இதை 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.
பீஜாமிர்தம்
தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, கோமியம் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊறவிட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். அதன் பிறகு சுத்தமானச் சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்கவேண்டும். அதன்பிறகே விதையை அந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்கவேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க் கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.
ஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன நீரிலேயே கலந்து விடலாம்.
கனஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள் கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு கோமியத்தைக் கலந்தால் போதும்.
நீம் அஸ்திரா
நாட்டுமாட்டுச் சாணம் இரண்டு கிலோ, நாட்டுமாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் இலை 10 கிலோ இவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடக்கூடாது. இதை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவைக் கலக்கிவிடவேண்டும். பின்பு வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
மீன் அமினோ அமிலம்
‘மீன் அமிலம்’ தயாரிப்பது மிகவும் எளிது. மீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும் செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து… நன்கு பிசைந்து… ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள் மூடி வைக்கவேண்டும். இருப்பத்தைந்து நாள் கழித்து, எடுத்து நன்கு கலக்கினால் டானிக் தயார். இந்த வளர்ச்சி ஊக்கியே ‘மீன் அமிலம்’. 10 லிட்டர் நீருக்கு 100 கிராம் (மில்லி) கலந்து பயிரில் தெளித்தால், பயிர் பச்சை கொடுத்து செழித்து வளர்கிறது

Wednesday, March 16, 2016

சிறுதானிய சமையல்... சுவை ப்ளஸ் ஆரோக்கியம்!

  • முன்பெல்லாம் வயதானவர்களின் பிரச்னைகளாகக் கருதப்பட்ட சுகர், பிளட் பிரஷர் போன்றவற்றை இப்போது இளைஞர்கள்கூட சுமந்துகொண்டிருக்கும் நிலை பரவலாகி வருகிறது. இதற்கெல்லாம் தவறான உணவுப்பழக்கத்தை முக்கிய காரணமாக உணவியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். நாம் பாரம்பர்யமாக உபயோகித்துவரும் சிறுதானியங்களை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னைகளைக் கட்டுக்குள் கொண்டுவரலாம். சிறுதானியங்களில் சுவையான, விதம்விதமான உணவு வகைகளை செய்து பரிமாறினால், குடும்பத்தினர் உற்சாகமாக சாப்பிட்டு, ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்வார்கள்’’ என்று கூறும் சமையல்கலை நிபுணர் தீபா பாலசந்தர்... ஸ்வீட் பால்ஸ், இடியாப்பம், லஸ்ஸி, டோக்ளா என்று  சூப்பர் சுவை கொண்ட உணவுகளை இங்கே சிறுதானியங்களில் தயாரித்து வழங்குகிறார்.
சாமை தயிர் சாதம்
தேவையானவை: சாமை அரிசி - ஒரு கப், தயிர், பால் - தலா அரை கப், கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு, தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: சாமை அரிசியை 10 நிமிடம் ஊறவிடவும். பிறகு நீரை வடித்துவிட்டு, அதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, இஞ்சித் துருவல் தாளித்து தனியே எடுத்து வைக்கவும். சாமை சாதத்துடன் தயிர், பால், தாளித்த பொருட்கள், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கலந்து  பரிமாறவும்.
ராகி ஸ்வீட் பால்ஸ்
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், வெல்லம் - ஒரு கப், முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் ஒரு சிட்டிகை, நெய் - தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகு மாவை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுக்கவும். வெல்லத்துடன், அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சூடாக்கி, ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், முந்திரி, கேழ்வரகு மாவை சேர்த்துக் கிளறவும். பிறகு, நெய்யைக் கையில் தொட்டுக்கொண்டு மாவை உருண்டைகளாக பிடிக்கவும்.
தினை பெசரெட்
தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், தினை அரிசி - முக்கால் கப்,  சின்ன வெங்காயம் - 10, இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக்கேற்ப), கொத்தமல்லித்தழை - கைப்பிடியளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: தினை அரிசி, பாசிப்பருப்பை முதல் நாள் இரவே ஊறவிடவும். மறுநாள் களைந்து, தோலுரித்த சின்ன வெங்காயம், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் உப்பு சேர்த்துக் கரைக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி,  அரைத்து வைத்த மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுத்தால்... தினை பெசரட் தயார்!
கம்பு லஸ்ஸி
தேவையானவை: கம்பு மாவு - ஒரு கப், தயிர் - 3 கப், இஞ்சி - சிறிய துண்டு, கறிவேப்பிலை - 10 இலைகள், பச்சை மிளகாய் - 3, உப்பு  - தேவைக்கேற்ப.
செய்முறை: கம்பு மாவை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, கறிவேப்பிலையை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். கம்பு மாவை தண்ணீர் விட்டுக் கரைத்து, அடிகனமான பாத்திரத்தில் ஊற்றிக் கிளறி வேகவிடவும். மாவு நன்கு வெந்தபின் இறக்கி ஆறவிடவும். பிறகு அதனுடன் அரைத்து வைத்திருக்கும் விழுது, தயிர், உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
குதிரைவாலி கிச்சடி
தேவையானவை: குதிரைவாலி அரிசி - ஒரு கப், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, கடுகு, பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை  - தாளிக்கத் தேவையான அளவு, நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ் மற்றும் பச்சைப் பட்டாணி (சேர்த்து) - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குதிரைவாலி அரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து... பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, காய்கறிக் கலவை சேர்த்துக் கிளறவும். இதனுடன்  உப்பு சேர்த்து, 3 கப் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்கவிடவும். பிறகு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, குதிரைவாலி அரிசியை சேர்த்து வேகும்வரை கிளறவும். நன்கு வெந்த பின் இறக்கி சூடாகப் பரிமாறவும்.
சிறுதானிய சத்துமாவு
தேவையானவை: மக்காச்சோளம் - கால் கிலோ, கோதுமை, கம்பு, வெள்ளை சோளம், கேழ்வரகு, கறுப்பு கொண்டைக்கடலை, அவல், சிவப்பரிசி, தினை - தலா  100 கிராம், முந்திரி, கறுப்பு எள்,  ஜவ்வரிசி - தலா 50 கிராம், ஏலக்காய் - 5.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் தனித்தனியே வறுத்து, ஆறியபின் ஒன்றுசேர்த்து, மெஷினில் கொடுத்து மாவாக அரைத்து வைக்கவும். தேவையானபோது இந்த மாவில் கஞ்சி செய்து, பால் சேர்த்துப் பரிமாறலாம். கஞ்சியுடன் பழ வகைகளை சேர்த்தும் தரலாம்.
இந்தக் கஞ்சி உடலை உறுதியாக்கும். வளரும் குழந்தை களுக்கு மிகவும் நல்லது.
ராகி முறுக்கு
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், கடலை மாவு - கால் கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எள், சீரகம் - தலா 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அகலமான பாத்திரத்தில் மாவு வகைகளுடன் உப்பு, பெருங்காயத்தூள், எள், சீரகம், மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். 6 டீஸ்பூன் எண்ணெயைத் தனியே சுடவைத்து மாவுக் கலவையில் ஊற்றிக் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்துக்கு பிசையவும். கடாயில் எண்ணெயைக் காயவைக்கவும். முறுக்கு குழலில் `ஸ்டார்’ வடிவ துளையிட்ட அச்சை போடவும். பிசைந்த மாவை முறுக்கு குழலில் போட்டு, சூடான எண்ணெயில் முறுக்குகளாகப் பிழிந்து, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
வரகு புளியோதரை
 
தேவையானவை: வரகரிசி - ஒரு கப், மல்லி (தனியா), எள் - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10,  புளி -  பெரிய எலுமிச்சை அளவு, வேர்க்கடலை - 5 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - தாளிக்கத் தேவையான அளவு, பொடித்த வெல்லம் - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - கால் கப், உப்பு - தேவைக்கேற்ப. 
செய்முறை: வரகரிசியை 10 நிமிடம் ஊறவைத்து, களைந்து, இரண்டு கப் தண்ணீர் விட்டு வேகவிடவும். புளியை ஊறவைக்கவும். வெறும் வாணலியில் மல்லி (தனியா), எள், வெந்தயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்து ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளித்து, புளியைக் கரைத்து ஊற்றி... மஞ்சள்தூள், உப்பு, வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு, அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்துக் கிளறி, எண்ணெய் நன்கு பிரிந்துவரும்போது இறக்கினால்... புளிக்காய்ச்சல் தயார். தேவையான அளவு புளிக்காய்ச்சலை சாதத்துடன் கலந்து பரிமாறவும்.
சிறுதானிய இடியாப்பம்
தேவையானவை: சிறுதானிய சத்துமாவு (தயாரிக்கும் முறை முன் பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ளது)  - ஒரு கப், தேங்காய்த் துருவல் - கால் கப், சர்க்கரை - தேவைக்கேற்ப, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை: சிறுதானிய சத்து மாவை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். பிறகு, அதனுடன் எண்ணெய், தேவையான அளவு வெந்நீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். மேலே தேங்காய்த் துருவல், சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும்.
சிறுதானிய டோக்ளா
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், ரவையாக  உடைத்த கம்பு, தினை, சோளம்  (சேர்த்து) - ஒரு கப், தயிர் - 2 கப், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, கேரட் துருவல் - 4 டீஸ்பூன், கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தாளிக்கத் தேவையான அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தயிரில் கேழ்வரகு மாவு, கம்பு - தினை - சோள ரவை சேர்த்து ஊறவைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு... கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்துக் கிளறவும். இதை சிறுதானிய மாவு - ரவை கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் உப்பு, கேரட் துருவலையும் சேர்த்துக் கலந்து, குழிவான தட்டில் ஊற்றி, ஆவியில் வேகவிட்டு எடுத்து, துண்டுகளாக்கிப் பரிமாறவும்.


-Vikatan